வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

என்ன நினைப்பீர்கள்? - காரஞ்சன் (சேஷ்)

என்ன நினைப்பீர்கள்?

காணவிழைந்த நபர்
கண்ணெதிரில் வந்து நின்றால்?

பயணத்தின் போது
பலபேர் நின்றுவர
உங்களுக்கு மட்டும்
உட்கார இடம்கிடைத்தால்?

திரையரங்கில் உங்களோடு
டிக்கட் தீர்ந்துவிட்டால்?

கொட்டும் மழையில்
குடையோடு ஒருவர்
ஒதுங்கி நிற்கும் உங்களுக்கு
உதவ முற்பட்டால்?

வாங்கிய கடனுக்கு
வட்டியெல்லாம் தள்ளுபடி!

வரிசையில் நிற்கையிலே
பின்நிற்கும் உங்களை
முன்செல்ல அனுமதித்தால்?

நேயர் விருப்பத்தில்
நினைத்த பாடல் ஒலித்திட்டால்?

தெரிந்த வினாக்களெல்லாம்
தேர்வினிலே இடம்பெற்றால்?

வெற்றிபெறத் தேவை
ஈரிரண்டு ரன்கள்
இருப்பதோ ஒருபந்து
இருந்தபோதும் நாம் வென்றால்?

கடைசிப் பேருந்தை
கடைசியாக நீர் அடைந்தால்?

எய்த கல்லுக்கு
இருமாங்காய் வீழ்ந்திட்டால்?

கடிந்துரைக்கும் நபரொருவர்
கனிவாக பதிலிறுத்தால்?

மொழியறியா ஊர்தனிலே நம்
மொழியறிந்த நபர் கிடைத்தால்?

பழுதடையும் வாகனம்
பணிமனை எதிர் இருந்தால்?

பிறந்தநாள் பரிசாக
பிடித்தபொருள் கிடைத்திட்டால்?

காதலித்த பெண்ணே
கைப்பிடிக்க வாய்த்திட்டால்?

கற்பனையில் நினைத்தபடி
காணநேர்ந்திட்டால்?

என்ன நினைப்பீர்கள்?
நிச்சயம்
என்னை இனி நினைப்பீர்கள்!

                                                       -காரஞ்சன்(சேஷ்)
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

9 கருத்துகள்:

  1. //என்ன நினைப்பீர்கள்?
    நிச்சயம்
    என்னை இனி நினைப்பீர்கள்!//

    கிடைக்கவில்லையெனிலும் நினைப்போம்! :)

    நல்ல கவிதை நண்பரே... தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
  2. //பயணத்தின் போது
    பலபேர் நின்றுவர
    உங்களுக்கு மட்டும்
    உட்கார இடம்கிடைத்தால்?//

    நான் உட்கார இடமிருந்தால் மட்டுமே, வாகனத்தில் ஏறுவேன்.

    மற்றவையெல்லாமே அருமையானவை. நிச்சயம் உங்களை நினைப்பேன்.
    வெங்கட் சொல்வது போல கிடைக்கா விட்டாலும் உங்களைத்தான் நினைப்போம்.

    பதிலளிநீக்கு
  3. மிகச் சரி
    அடுக்கிகொண்டே போகும்போதே
    மனம் ஆஹா என் துள்ளலாட்டம் போட ஆரம்பித்தது
    இவ்வளவு பாசிட்டிவான நிகழவுகளை சொல்லிப் போகிறாரே
    நல்ல பின்னூட்டம் இடவேண்டும் என நினைத்தேன்
    கடைசியில் நீங்கள் சொல்லிப் போனது போல
    இவைகள் எல்லாம நடக்கையில் உங்களை நிச்சயம்
    நினைக்காமல் இருக்க முடியாது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. நடக்கும் என்பார் நடக்காது.....
    நடக்காதென்பார் நடந்து விடும் !
    கிடைக்கும் என்பார் கிடைக்காது.....
    கிடக்காதென்பார் கிடைத்து விடும் !

    இந்த பாடல் தான் சட்டென்று நினைவுக்கு வந்தது! நன்றி நண்பரே !

    பதிலளிநீக்கு
  5. கடவுளை நினைப்பேன். படைப்பதனால் நீயும் இறைவன்தானே!

    பதிலளிநீக்கு
  6. Simply Superb, I enjoyed it very much.I pray to God that everybody should get what they are due to get. Shyamala .S -Pondy

    பதிலளிநீக்கு