ஞாயிறு, 1 ஜூன், 2014

சிறுகதை விமர்சனப் போட்டியில் முதற்பரிசு! -காரஞ்சன்(சேஷ்)

மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டியில் "ஏமாற்றாதே! ஏமாறாதே" சிறுகதையின் விமர்சனத்திற்கு  எனக்கும் என் மனவிக்கும் முதற் பரிசு கிடைத்துள்ளது. 
 
 

"ஏமாற்றாதே! ஏமாறாதே" கதைக்கான இணைப்பு இதோ:


பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2014/06/vgk-18-01-03-first-prize-winners.html

வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!


கதையின் தலைப்பே யாரோ ஒருவர், யாரையோ ஏமாற்றியதால் ஏமாந்து போனாரோ? என்ற கேள்வியை நம்முள் எழுப்பி, வாசிக்க ஈர்க்கிறது.


என்னுடைய விமர்சனம்!

கதாசிரியர், தான் வலியுறுத்த எண்ணிய கருத்தை, நீதியை எளிய கதாபாத்திரங்களின் துணையோடு, மிகவும் வலிமையாகவும், உறுதியாகவும் வாசகர் அனைவரின் உள்ளத்திலும் “பசுமரத்து ஆணியாய்”ப் பதிய வைப்பதில் வெற்றி கண்டு விடுகிறார்.

இந்தக் கதையை, படக்கதையாக்கி, தொடக்கக் கல்வி மாணாக்கர்களுக்குப் பாடமாக வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என எண்ணத் தோன்றுகிறது.


பிஞ்சுக் குழந்தைகளின் கையில் கிடைக்கக் கூடாத பொருட்களை அவர்கள் எடுக்க முற்படும்போது,  பெற்றோர்கள் அதை மறைத்து வைத்துவிட்டு, “எங்கே காணோம், காக்கா தூக்கிக் கொண்டு சென்றுவிட்டது” என  உரைப்பதில் ஆரம்பித்து விடுகிறது ஏமாற்றுதல்.

 
நாம் சிறுவர்களாக இருந்த நாட்களில் காக்காய் நரியிடம் வடை இழந்த கதையிலும், பாட்டி சுட்ட வடையை காக்காய் தூக்கிச் செல்வதும், நரி காக்காயை ஏமாற்றி வடையை எடுத்துக் கொள்வதாகவும் படித்துள்ளோம். ஏமாற்றுவது எப்படி என்பதும் சிறுவயதில் நம்மையறியாமலேயே நம்முள் விதைக்கப்பட்டதோ? எனும் எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.

 
“உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வே மெனல் “ –இது வள்ளுவர் வாக்கு.


திருட்டு என்பது பிறருடைய பொருளை அவருக்குத் தெரியாமல் மற்றொருவர் எடுத்துக் கொள்வது ஆகும். ஊழல், பிறர் சொத்தை அபகரித்தல், ஏமாற்றுதல், வஞ்சகம், திருட்டு இவையெல்லாம் தீய செயல்கள். இவற்றை நாம் பின்பற்றக் கூடாது.

இதையே வள்ளுவர்

“தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்..” என்று எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த உண்மைகளை, நீதியை, நம் உள்ளங்களில் பதிய வைக்க எழுதிய படைப்பு இது!

இன்றைய உலகில்   பலராலும் பலர் ஏமாற்றப்படுவது தொடர் கதையாகி விடுகிறது.   மக்கள் விழிப்புணர்வு பெறாத வரை ஏமாற்று வேலைகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும் என்பதையும் எடுத்துரைக்கத்  தவறவில்லை.


பாத்திரப் படைப்பில் வெற்றி!

1.தேங்காய் விற்கும் கிழவி.

எளியவளாக, உழைத்துப் பிழைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, தள்ளாத வயதிலும், தளரா மனத்துடன் இயன்ற அளவு உழைத்து உண்பவராக, காலையில், சாலையோரத்தில் கடை விரிக்கும் பாட்டி நம் கண்முன் விரிகிறாள்.. தேங்காய் வியாபாரம் செய்யும் கிழவியின் வயோதிகத் தோற்றம், நீண்ட நாட்களாக அவள் உழைத்துப் பிழைப்பவள் என உணர்த்தும்  வகையில் 150 காய்களைச் சுமந்தவளால் தற்போது 50 காய்களை மட்டுமே சுமக்க முடிவதாகக் கூறியதிலிருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாராட்டத் தக்கது.  சைஸ் வாரியாகத் தேங்காய்களை அடுக்கி அதற்கேற்றாற்போல் விற்பனை செய்யும் விலையை நிர்ணயிப்பது வரை அழகான படத்துடன், அருமையாக அருகிலிருந்து பார்த்தது போல் விளக்குகிறார்.


மேலும் அவள் மீது அனுதாபத்தைத் தூண்டும் விதமாக, அவள் வியாபாரத்தில் மனக்கணக்குப் போட முடியாமல் தடுமாறுவதும், பார்வைக் குறைபாட்டால் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்களுக்கிடையில் வேறுபாட்டை அறிய முடியாமல் தவிப்பதாகவும் கண்பித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்து.

ஒரு தேங்காயை விற்றால் அவளுக்குக் கிடைப்பது மிகவும் சொற்பமான இலாபமே. அதுவும் பேரம் பேசுபவர்களின் திறமையைப் பொறுத்து மாறுபடும். இதில் தவறாகக் கணக்கு போட்டுவிட்டாலோ அல்லது தவறாகச் சில்லரை கொடுக்க நேர்ந்தாலோ பாட்டிக்கு மிகவும் நஷ்டம்தானே?

 
இந்த இரண்டு ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்ட சமயம், சென்னையில் நடைபாதைக் கடையில் பூவியாபாரம் செய்யும் மூதாட்டி ஒருவர் ஒரு வார இதழுக்கு அளித்திருந்த பேட்டி நினைவுக்கு வருகிறது. இரண்டு நாணயங்களுக்கும் வித்தியாசம் அறியாமல் அவசரத்தில் கொடுத்துவிடுவதால் நஷ்டமடைய நேர்வதாக அந்த மூதாட்டி சாடியிருந்தார். இன்னும் ஒருபடி மேலே போய் சிலர் அழுக்கு நோட்டுகள், செல்லாத நோட்டுகள், கிழிந்து ஒட்டப்பட்ட நோட்டுகளாகப் பார்த்து, இது போன்றவரிடம் ஏமாற்றித் தள்ளிவிட்டு ஏதோ உலக சாதனை ஒன்றைச் செய்து முடித்தது போல் எண்ணி அல்ப சந்தோஷம் அடைவார்கள்.

கிழவி வாங்கி வரும் காய்கள் அனைத்துமே நல்ல காய்களாக இருந்துவிட்டால் நன்று. இல்லாவிட்டால் அதன் மூலம் அவளுக்குச் சற்று நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.

இப்படி ஒரு கிழவியைக் கண்முன் நிறுத்தி, அவர்படும் துயரம்தனை விளக்கி, அந்நிலையிலும் உழைத்துப் பிழைப்பதில் உறுதியானவர் என்பதை வலியுறுத்தி அந்தப் பாத்திரத்திற்கு அனைவரின் நெஞ்சிலும் ஓர் உயர்வான எண்ணத்தையும், அனுதாபத்தையும் உண்டாக்குவதில் வெற்றி பெற்று விடுகிறார்.  

 
அடுத்த பாத்திரமாக

தேங்காய் வாங்க வரும் நம் கதையின் நாயகன், 15 வருடங்களுக்கு முன் வேண்டிக்கொண்ட, தன் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி, தேங்காய்க் கடை விரித்துள்ள கிழவியிடம் வருவதும், தட்டிப் பார்த்து, நல்ல காய்களாகப் பார்த்து 12 காய்களாகத் தேர்ந்தெடுத்து, அல்பத்தனமாக ஒன்றைக் கிழவி அறியாமல் சுட்டுக்கொண்டு, அடிமாட்டு விலைக்குப் பேரம் பேசி, 78 ரூபாயைக் கொடுத்துச் செல்வதில் நம் அனைவரின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்கிறார்.

குமரகுருபரரின் நீதிநெறிவிளக்கத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல்,

 ““தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடமை அம்மா பெரிதென்று” இவர் அகமகிழ்ந்து, கிழவியிடம் அடிமாட்டு விலைக்கு பேரம் பேசாமல், பொருளுக்கேற்ற உரிய விலையைக் கொடுத்து வாங்கி அவரின் உழைப்புக்கு மதிப்பளித்திருக்க வேண்டாமா?

எல்லாவற்றிற்கும் மேலாக 15 ஆண்டுகளுக்கு முன்னர் வேண்டிக்கொண்ட பிரார்த்தனையை அப்போதே நிறைவேற்றியிருந்தால் எவ்வளவு மிச்சமாகி இருக்கும்? இப்போது இவ்வளவு செலவு செய்ய நேர்ந்ததே (அதுவும் சுட்டுக் கொண்ட காயின் மதிப்பைக் கழித்து) என கணக்குப் பார்ப்பதில் அவரது அற்பமான மனநிலை வெளிப்படுத்தப் படுகிறது.

 
உண்மையான, தூய்மையான பக்தியுடன், ஒரு சிறிய பூவை அர்ப்பணித்தாலும் இறைவன் அதை அகமகிழ்ந்து ஏற்கும் இயல்புடையவன் அல்லவா?. இதுபோன்று பிறரை ஏமாற்றும் எண்ணத்துடன் செயல்படுபவர்கள், நிறைவேற்றும் பிரார்த்தனை எப்படி உகந்ததாக அமையும் என்ற கருத்தை நம் அனைவருள்ளும் பதிய வைப்பதிலும், கதாநாயகன் மீது எரிச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதிலும் கதாசிரியர் அடுத்த வெற்றியை அடைந்துவிடுகிறார்.

 
சமுதாயத்தில் இதுபோன்ற எண்ணம் கொண்டவர்களைச் சாடும் விதமாக இவர் எடுத்துவைக்கும் கருத்துகள் அத்தனையும் நன்முத்துக்கள்.

 
இதுபோன்ற டிப்டாப் ஆசாமிகள்

  Ø மலிவான விலையில் தரமான பொருளை நேர்மையாக விற்கும் இது போன்ற ஏழை வியாபாரிகளிடம்தான் இவர்களின் பாச்சா பலிக்கும். அதுமட்டுமின்றி அல்பத்தனமாக, ஏதாவது ஒன்றைக் கடத்தி வந்து விடுவார்கள்.

   Ø பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளிலும், கடைகளிலும் நாம் வாங்கும் காய்கறிகளையோ, பழங்களையோ பொன்போல் நிறுத்து, ஒவ்வொரு கிராமுக்கும் உரிய விலையுடன், விற்பனைவரி, சேவை வரி முதலியவற்றைச் சேர்த்து வாங்கும் இடங்களில் தப்பித்தவறி பேரம் பேச நினைத்தாலும் பட்டிக்காட்டான் என்ற பரிகாசத்திற்கு ஆளாக நேருமே என்ற எண்ணத்தால், பயத்தால் வாய்மூடி மெளனியாக இருந்துவிடுகிறார்கள்.

  Ø “கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்” என்றுணர்ந்த காலத்தில், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்ட இடங்களிலும் இவர்கள் செய்கை எடுபடாமல் போய்விடுகின்றது.


மேற்கண்ட நிகழ்வுகளைச் சாடி, அதற்கான தீர்வைத் தருவதிலும் தனித்து நிற்கிறார் கதாசிரியர்.

ü பார்க்க மனதிற்கு நிறைவாகவும், காய்கறிகள் பச்சைப்பசேல் என்று ஃப்ரெஷ் ஆகவும் இருந்து, சரியான எடையும் போட்டுக் கொடுக்கும் வியாபாரிகளிடம், அவர்கள் சொல்லும் விலை ஓரளவு நியாயமாக இருப்பின், அநாவஸ்யமாக பேரம் பேசுவதில் அர்த்தமே இல்லை. 

ü அப்படிப்பட்ட வியாபாரிகள் கூட இப்போதெல்லாம் தங்களுக்குள் சங்கம் அமைத்துக்கொண்டு ’ஒரே விலை - கறார் விலை’ என்று சொல்லி மிகவும் உஷாராகி வருகின்றார்கள்.  (இதில் ஆசிரியரின் மகிழ்ச்சி வெளிப்படுகிறது)

ü ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் முன்னபின்ன சொன்னால் தான் என்ன; நாமும் கொடுத்தால் தான் என்ன; குறைஞ்சாப்போய் விடுவோம்? பிறர் வயிற்றில் அடிக்காமல் நியாயமான விலை கொடுத்து வாங்கி வந்தால் அதன் ருசியே தனியாக இருக்குமே! பேரம் பேசி விலையைக் குறைக்காமல், அவர் கேட்ட பணத்தை அப்படியே கொடுத்த நமக்கு காய்கறிகளை, மனதார வாழ்த்தியல்லவா கொடுத்திருப்பார் .... அந்த வியாபாரியும். 

டிப்டாப் ஆசாமிகளுக்கு ஒரு சாட்டையடி கொடுத்து அறிவுரைகளையும் வழங்கிய கதாசிரியருக்கு ஒரு “ஓஹோ” போடலாம்.


 
 தன் தவறை உணர்ந்து வருந்தும் நாயகன்!

சதிர் தேங்காய் பொறுக்கும் சிறுவர்களுடன் சென்று 12 காய்களையும் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு , திருடிக்கொண்டு வந்த 13வது காயுடன் வீடு திரும்பிய கணவனுக்கு, அவர் மனைவி அந்தத் தேங்காயை நன்றாக அலம்பி விட்டு, நாரையும் உரித்து விட்டு, அரிவாளால் லேஸாக ஒரு போடு போட்டு, தேங்காயின் இளநீரை கீழே சிந்தாமல் சிதறாமல் ஒரு சிறிய பாத்திரத்தில் பொறுமையாகப் பிடித்து, வெயிலில் அலைந்து திரிந்து விட்டு வந்துள்ளாரே எனக் குடிக்கக் கொடுத்து விட்டு, சமையல் அறைக்கு வந்து தேங்காயை அரிவாளால் மீண்டும் ஒரு போடு ஓங்கிப் போட்டு உடைக்கையில் ”என்னங்க இது; இந்தத்தேங்காய் அழுகலாக உள்ளதே! பார்த்து வாங்கியிருக்கக்கூடாது! ஸ்வாமிக்கு உடைத்ததெல்லாமாவது நன்றாக இருந்ததா?” என்று கேட்டவாறே அந்த அழுகின தேங்காயைத் தன் கணவனிடம் காண்பிக்கிறாள்.

மனைவி உரைத்தது உறைத்ததோ நாயகனுக்கு?

நம் கதாநாயகன் “மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாத நிலையடைந்து வாயிலிருந்த இளநீரை வாஷ்பேஸினில் துப்பிவிட்டு, சாமிக்கு உடைத்த காய்கள் அனைத்தும் நன்றாக இருந்தன என்று கூறி திருடனுக்குத் தேள் கொட்டிய நிலையை அடைகிறார். அழுகிய தேங்காய் மூடியில் அந்தக் கிழவியின் முகம் தெரிவதாகச் சித்தரித்தது மிக அருமை. தன்நெஞ்சே தன்னைச் சுட்டிருக்கும் அல்லவா. ஏளனமாகச் சிரித்தது அனைத்துப் பிள்ளையார்கள் மட்டும் அல்ல. நாமும் தான்.

இப்படி முடித்ததில் ஆசிரியர் தன் படைப்புத் திறனை  மீண்டும் நிலைநாட்டுகிறார்.

 இப்படி முடித்திருந்தால்…(என் தாழ்வான கருத்து)

அழுகிய தேங்காயில் அந்தக் கிழவி முகம் தெரிந்ததும், நம் கதாநாயகன் அந்தக் கிழவியிடம் அன்றோ அல்லது மறுநாளோ சென்று தான் செய்த களவுக்குப் பரிகாரமாக, “பாட்டி நேற்று என் வேண்டுதலை நிறைவேற்ற வாங்கிச் சென்ற 12 காய்களும் அருமை. சற்று விலைகுறைத்து வாங்கி விட்டேன் . அதற்காக வருந்துகிறேன் என்று கூறிவிட்டு, ஒரு 10 ரூபாயாவது வைத்துக்கொள்ளுமாறு அளித்திருந்தால் கதாநாயகருக்கு மன ஆறுதல் கிடைத்திருக்கும். நமக்கும் அவர்மீது எரிச்சல் சற்றுக் குறைந்திருக்கும்.

அல்லது

ஒருவேளை அந்தக்கிழவி அதை ஏற்க மறுத்து, தேடி வந்து பாராட்டியதற்கு நன்றி கூறி ஆசீர்வதிப்பதாக அமைத்திருந்தால், நம் அனைவரின் உள்ளத்திலும், இன்னும் உயர்வான நிலையில் நீங்கா இடம்பிடித்த பாத்திரமாக மாறியிருப்பார் என்பது என் தாழ்வான கருத்து.

மொத்தத்தில், கதைக்கான கரு, அதற்கேற்ற பாத்திரப் படைப்புகள், கோர்வையான நடை, இடையிடையே தவறான செயல்களுக்குத் தீர்வுகள் என அனைத்தும் நிறைந்த தரமான ஒரு சிறுகதையைப் படைத்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)

18 கருத்துகள்:

  1. மேலும் பல வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்!- தக்‌ஷி

    பதிலளிநீக்கு
  2. இரட்டிப்பு சந்தோசம் ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  3. அன்புள்ள

    வணக்கம். மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும். மேன்மேலும் பல பரிசுகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  4. சிறுகதை விமர்சனப் போட்டியில் தாங்கள் மீண்டும் ஓர் முதல் பரிசினை பெற்றமைக்கு உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும், என் சார்பிலும் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    மேன்மேலும் பல பரிசுகள் பெறவும் நல்வாழ்த்துகள்.

    தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

    அன்புடன் கோபு [ VGK ]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  5. அன்பு நண்பர் சேஷாவுக்கு,தங்கள் இணைப்பின் மூலம் இச்சிறுகதையும் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
    விமர்சனமும் அருமை! உங்களுக்கும் உங்கள் துணைவிக்கும் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  6. முதல் பரிசு பெற்ற உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். விமர்சனம் திரு வை.கோ. அவர்களின் தளத்திலேயே படித்து ரசித்தேன். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சேஷாத்ரி - ஒரு மறுமொழி எழுதினேன் - வரவில்லை - மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறதோ - சரி - பொறுத்திருந்து பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      நீக்கு
  7. அன்பின் சேஷாத்ரி - அருமை நண்பர் வை.கோ நடத்துகின்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள் - மேன்மேலும் சிறப்புற விமர்சனம் எழுதி மேன்மேலும் பலப் பல முதல்பரிசுகள் பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு